பதுளையில் வாகனங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் இருந்தவர்களிடையே ஏற்பட்ட மோதலில், தனியார் பஸ் சாரதியொருவர் கத்தி குத்துக்கு இழக்காகிய நிலையில் குறித்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் பதுளை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
தனியார் பஸ்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு பஸ்கள் வரிசைகள் நின்றன. பின்னாலிருந்து பஸ்சொன்று முன்னால் சென்று எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போது, பெரும் அமைதியின்மையும், பதற்றமும் ஏற்பட்டது.
அத்துடன் வரிசையிலிருந்த பிறிதொரு தனியார் பஸ் சாரதி, முன்னால் சென்று எரிபொருளைப் பெற முயற்சித்த பஸ் சாரதியை, கத்தியினால் வெட்டியதுடன், தமது பஸ்சையும் எடுத்துக்கொண்டு கத்தியுடன் தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து தப்பிச் சென்றவரைக் கைது செய்வதுடன், அவருக்கு உதவியவர்களையும், கைது செய்யும்படி, எரிபொருளைப் பெற வந்தவர்கள் பதுளை பிரதான பாதையை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுவரை கத்தியால் குத்தப்பட்டவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதை போராட்டக்காரர்கள் தடுத்து இருந்தனர்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த தனியார் பஸ் சாரதியை, பதுளைப் பொலிசார் தடைகளை மீறி 1990 அவசர அம்புயூலன்சில் ஏற்றி பதுளை அரசினர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
பொலிசார் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளின் பயனாக மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய ஆறுபேரை இன்று காலை கைது செய்தனர்.
அத்தோடு வெட்டுக்காயங்களுக்கு உள்ளானவர் பதுளை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

