கல்முனையில் தூர்நாற்றம்; 8பேருக்கு அழைப்பாணை!

கல்முனை மாநகர  பிரதேசங்களில்  தொடர்ச்சியாக வீசுகின்ற  தூர்நாற்றம் தொடர்பில்   எட்டுப் பேருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று (23) திங்கட்கிழமை அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  குறித்த தூர்நாற்றம் தொடர்பில் தீர்க்கமான காரணங்களை இதுவரை கண்டறிந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  ஐ.எல்.எம். றிபாஸ்,   சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  யூ.எல்.எம். நியாஸ் , கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் எம்.ஜே.கே.எம் அர்சத் காரியப்பர்,  கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  முஹம்மத் அஸ்மி , கல்முனை மாநகர சபை விலங்கு வைத்தியர் வெட்டபொல ,   கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார்,அம்பாறை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட உதவிப் பணிப்பாளர்   மற்றும் குறித்த விடயம் தொடர்பில் சில செய்திகளை எழுதிய  பிராந்திய ஊடகவியலாளர் ஆகியோருக்கே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர பொது சுகாதார குழுவின் தவிசாளர் மற்றும்  மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி அன்பு முகையதீன் ரோஷன் அக்தாரினால் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு திங்கட்கிழமை(23)  கல்முனை நீதவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது  மேற்படி 8 பேரையும் எதிர்வரும் ஜுன் 6ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முறைப்பாட்டாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஆரிப் சம்சுதீன்,  எம்.எஸ்.ரஸாக் , சட்டத்தரணிகளான  ஜாவீட் ஜெமீல் ,அனோஜ் பிர்தௌஸ் ,அப்துல் கரீம் அகமட் றிப்கான்  ஆகியோர் மன்றில் ஆஜராகினர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *