
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைத்து அனைவரது ஒத்துழைப்போடும் அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் குழு இன்று கூடியது. அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் வரைபு குறித்து கலந்துரையாடி அமைச்சரவையில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது. மாலையில் இந்த வரைவு அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் இந்த வரைவை முன்வைத்து, அவர்களுடன் விவாதித்து பின்னர் அமைச்சரவைக்கு அறிக்கை அளிக்குமாறு எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி 21வது திருத்தச் சட்டத்தின் பிரதிகளை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களிடம் கையளிக்கவுள்ளார். அதன் பிறகு வெள்ளிக்கிழமை சந்தித்து அந்த யோசனைகளைப் பெறுவோம் என்று நம்புகிறோம்.
அதன் பின்னர் திருத்தங்களுடன் முழுமையான அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். இந்த திருத்தத்தை முதலில் வர்த்தமானி அறிவித்தலில் விரைவாக வெளியிட்டு பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல விரும்புவோருக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அனைவரின் ஆதரவுடன் இந்த திருத்தத்தை உடனடியாக நிறைவேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.