
நாட்டில் தற்போதுள்ள அரிசி கையிருப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடுப்பகுதி வரை மாத்திரமே போதுமானதாக இருக்குமென தெரியவந்துள்ளது.
பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விசாரணைக் குழு நேற்று கூடிய நிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி, இலங்கையின் மாதாந்த அரிசி தேவை 2 இலட்சம் மெற்றிக் டொன் எனவும், தற்போதைய இருப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடுப்பகுதிக்குள் தீர்ந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உணவுப் பற்றக்குறை மற்றும் நெருக்கடியினை நிவர்த்தி செய்வதற்கு விஞ்ஞான ரீதியாகவும் திட்டமிடப்பட்ட பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், உணவுப் பொருட்கள், உரங்கள், விதைகள் மற்றும் எரிபொருள் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், உணவுப் பற்றாக்குறை உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

