கிளி. பொலிசார் தாக்கியதாக கூறி டிப்பர் சாரதி வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி தருமபுரம் – பிரமந்தனாறு பகுதியில் இன்றைய தினம் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி மீது, பொலிசார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சாரதி, சட்டவிரோதமாக மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கல்லாற்று பிரதானவீதியில் வைத்து பொலிஸார் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தாக்கப்பட்ட சாரதி, தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக டிப்பர் வாகன உரிமையாளர் தெரிவிக்கையில்,

தனது டிப்பர் வாகனம் எரிபொருள் நிரப்புவதற்காகவே தனது வீடு நோக்கி வந்ததாகவும், வீதியில் சென்ற பொலிசார் டிப்பர் சாரதியை சரமாரியாக தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

தாக்கிய பின்னர் பொலிசார் வாகன சாரதியிடம் டிப்பரினை கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளதாகவும், டிப்பர் வாகன சாரதி தன்னால் இயலாத நிலையில் வைத்தியசாலைக்கு சென்று உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக பொலீசார் கூறுகையில்,

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக தமக்கு தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொழுது மணலைக் கொட்டி விட்டு டிப்பர் தப்பிச் செல்ல முற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தம்மால் சாரதி மீது தாக்ககுதல் நடத்தப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *