
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் முதற்கட்ட நிவாரண உதவி நேற்றுமுன்தினம் நாட்டை வந்தடைந்தது.
முதற்கட்ட நிவாரண உதவியாக 9 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி 50 மெற்றிக் தொன் பால்மா 25 மெற்றிக் தொன் மருந்து என்பன உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றில் அரிசி மற்றும் பால்மா என்பனவற்றை 25 மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல் பிரதமரின் செயலர் தலைமையில் நேற்று மாலை ’சூம்’ தொழில் நுட்பத்தின் ஊடாக மாவட்டச் செயலர்களுடன் இடம்பெற்றது.
இதேவேளை ஆரம்பத்தில் வறுமை நிலையிலுள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 20 கிலோ அரிசி வீதம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அந்த முடிவு மாற்றப்பட்டு அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள 9 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை பங்கிட்டு முன்னுரிமை அடிப்படையில் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு விநியோகிக்கப்படவுள்ளன.
எஞ்சிய 31 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியும் இலங்கைக்கு அடுத்த மாதம் முற்பகுதியில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதனை எஞ்சியுள்ள குடும்பங்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு பால்மா பைக்கெற்றுகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.