இலங்கையின் மருத்துவ நெருக்கடிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் உதவி

கொழும்பு,மே 24

இலங்கையின் மருத்துவ நெருக்கடியை சமாளிக்க பூரண ஆதரவை வழங்குவதாக உறுதியளித்த  உலக சுகாதார ஸ்தாபனம் (WHO), இலங்கைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை விரைவில் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை (24) சந்தித்த போதே இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி டொக்டர் அலகா சிங் உறுதியளித்தார்.

தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் இலங்கையில் உள்ள மருந்துப் பற்றாக்குறையை ஜூலை அல்லது ஓகஸ்ட் மாதத்துக்குள் தீர்க்க முடியும் என தாம் நம்புவதாகவும் அலகா சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து தேவைகளை மேம்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிபூண்டுள்ளது என்று வலியுறுத்திய அவர், தமது உதவித் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தின் கீழ் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

இலங்கையின் சுகாதாரத் தரத்தை மேம்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கும் ஆதரவையும் இந்தியா, பங்களாதேஷ் உட்பட பல நாடுகளின் ஆதரவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *