முல்லைத்தீவில் மண்ணெண்ணெய் இல்லை; மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக நம்பியுள்ள மக்கள் தற்போது தொழிலுக்கு செல்வதற்கு மண்ணெண்ணெய் இல்லாததால் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை முதல் கொக்குளாய் வரையான கடற்பரப்பில் 2000 மீன்பிடிப் படகுகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகத்திக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள போதும், சுமார் 18 நாட்களுக்கு மேலாக மண்ணெண்ணெய் கிடைக்காததன் காரணமாக தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தங்களுடைய வாழ்வாதார தொழிலுக்காக இந்த மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வந்தாலும், தற்போது மண்ணெண்ணெய் இல்லாததன் காரணமாக தொழிலை மேற்கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக விலை கொடுத்து இரவு நேரங்களில் மண்ணெண்ணையை பெற்றுக் கொள்பவர்கள் சட்டவிரோதமாக 400 ரூபா வரையில் மண்ணெண்ணையை தற்போது விற்பனை செய்கின்றனர் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை விடவும் சுமார் 18 நாட்களாக மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க முடியாத நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக மண்ணெண்ணெய் விநியோகத்திற்காக 2000 படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 400 பேருக்கும், முல்லைத்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 800 பேருக்கும், நாயாறு எரிபொருள் நிலையத்தில் 800 பேருக்கும், என இந்த எரிபொருள் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 18 நாட்களாக எரிபொருள் வருகை தரவில்லை. இதனால் அனைவருக்கும் இவ்வாறான ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது 400 ரூபாய்க்கு கூட மண்ணெண்ணை வாங்க முடியாத நிலை காணப்படுவதாகவும், உடனடியாக மண்ணெண்ணையை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதனை விடவும் தாங்கள் குறுகிய கடற்ப்பரப்பிலேயே தொழில் செய்யக்கூடிய நிலைமை இருந்த போதும் தற்போது அங்கு சட்டவிரோதமாக கூட்டு வலை மற்றும் வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல் டைனமற் பாவித்து மீன் பிடித்தல் போன்ற சட்டவிரோத தொழில்கள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக தங்களுடைய தொழிலை செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது.

அதிக தூரம் சென்று மீன் பிடிக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும், அதற்கு தற்போது எரிபொருள் இல்லாதது மிகப் பாரிய சவாலாக உள்ளதாகவும், குறிப்பிட்ட சட்டவிரோத தொழில்களை நிறுத்தி தருமாறு பல்வேறு தடவைகளாக மாவட்ட செயலகம் கடற்படை கடற்தொழில் நீரியல் வள திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்கள் இடம் கேட்ட போதும் இதுவரை எந்தவித தீர்வும் இல்லாமையால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக அரசு இந்த சட்டவிரோத தொழில்களை நிறுத்தி தமக்கான மண்ணெண்ணெய் விநியோகத்தை மேற்கொண்டு, தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிசமைக்க வேண்டும் எனவும், இது நடைபெறாத பட்சத்தில் நாளை மறுதினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *