புத்தளம்,மே 24
புத்தளம் பிரதேசத்தில் இன்று பெய்த தொடர் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதச் சென்ற மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரிய வருகிறது.
புத்தளம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சாஹிரா தேசியப் பாடசாலை, புத்தளம் சென். ஆன்ட்ரூஸ் மத்திய கல்லூரி மற்றும் புத்தளம் இந்து மத்தியக் கல்லூரி என்பனவும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிந்தது.
இதனால், மேற்குறிப்பிட்ட மூன்று பாடசாலைகளிலும் இன்றைய தினம் கல்வி பொதுத்தராதர சாதாரன தரப் பரீட்சைக்கு தோற்ற வருகை தந்த மாணவ மாணவிகள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்.
திட்டமிட்டபடி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த பரீட்சைகள், தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக 9.45 மணிக்கே ஆரம்பமாகியுள்ளதாக மாணவர்கள் குறிப்பிட்டனர்.
புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையில் கீழ் வகுப்பறையில் பரீட்சைகள் நடத்துவதற்காக சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், வெள்ளம் காரணமாக வகுப்பறைகளுக்குள் வெள்ளம் புகுந்தமையால் குறித்த பாடசாலையின் மேல்மாடிப் பகுதியில் சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்காக ஒழுங்குகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக குறித்த பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டார்.
புத்தளம் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர், பெற்றோர்கள் ஆகியோருடன் முப்படையினரும் கூட்டாக இணைந்து வெள்ளநீரில் இருந்து இயந்திர படகு சேவை மூலம் மாணவர்களை பாதுகாப்பாக கீழ் மாடி வகுப்பறையிலிருந்து மேல்மாடி வகுப்பறைக்கு அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.



