கடல் வழியாக இந்தியாவிற்கு சென்றமையாலும், இந்திய கடவுச்சீட்டு பெறுவதற்கு முயற்சித்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு இன்றுவரை தமிழக சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள், தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து, இன்று 6வது நாளாக உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மூன்று வருடங்களாக தடுத்த வைக்கப்பட்டுள்ள நாம் எமது குடும்பங்களோடு சேர்ந்து வாழ உதவுங்கள் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,
மதிப்பிற்குரிய முதலமைச்சர் ஐயா அவர்களே இன்று 6வது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தில் எங்கள் சகோதரர்கள் 10 பேர் விடுதலைக்காக காத்திருக்கிறார்கள்.
ஒரு சொட்டு உணவு கூட எடுத்துக் கொள்ளாமல், முழுமையாக பட்டினியாக இருந்து தங்கள் குடும்பங்களோடு சேர்ந்து வாழ முடியாதா என்ற எண்ணத்தோடு இந்த உண்ணாநிலை போராட்டத்தில் காத்திருக்கிறார்கள்.
எத்தனை முறை எங்கள் குழந்தைகளை அள்ளிக் கொஞ்ச முடியாமல் தவித்து இருப்போம், எங்கள் உறவுகள் உடல்நலம் முடியாமல் இறுதிக்கட்டங்களில் வைத்தியசாலைகளில் இருக்கும் பொழுது ஒரு முறையாவது அவர்களை சந்தித்து விட்டு உதவ முடியாது என ஏங்கி இருப்போம்.
எங்கள் குடும்பங்கள் மிகவும் வறுமையில் இருக்கும் இந்த நிலையில், நாங்கள் அவர்களுக்கு உழைத்துக் கொடுக்க நாதி இல்லாதவர்களாக இந்த சிறையிலே தினமும் அழுது கொண்டு வாழ்கிறோம் ஐயா.
இலங்கையிலே தற்போதைய வறுமையின் காரணமாக, தாங்கள் தாராள மனம் கொண்டு, அத்தனை கோடி மதிப்புள்ள உணவு பொருட்களை அனுப்பி வைத்தீர்கள் ஐயா.
நாங்கள் இங்கு உமக்கு அருகிலேயே பட்டினியாக, எங்கள் வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறோம் ஐயா.
எங்களையும் ஒருமுறை கண்ணெடுத்துப் பார்த்து, எங்கள் விடுதலைக்காக உதவி செய்யுங்கள். மிகவும் மிகவும் மனமிரங்கி கேட்டுக்கொள்கிறோம். எங்களை விடுதலை செய்து எங்கள் குடும்பங்களோடு வாழ விடுங்கள் ஐயா. – என்றுள்ளனர்கள்.




