தமிழ் அரசியல்வாதிகள் மீனவர்களின் பிரச்சினை குறித்த நடவடிக்கை எடுக்காமல் விட்டால், இனி நாங்களே பார்த்துக் கொள்கின்றோம் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசாமல் இருக்க வேண்டாம். அவ்வாறு உங்களால் எங்களின் பிரச்சினைகள் குறித்து பேச முடியாமல் இருந்தால் எங்களிடம் விட்டு விடுங்கள் நாங்கள் எங்கள் பிரச்சினைகளை பார்த்து கொள்கிறோம்.
அனைவரினது பிரச்சினைகள் குறித்தம் பேசுகின்ற அரசியல் தலைவர்களுக்கு ஏன் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து பேச முடிவதில்லை. அவர்களின் வாழ்வாதாரம் குறித்து பேச முடிவதில்லை.
நேற்றைய தினம் மண்ணெண்னை இல்லாததன் காரணத்தால் 20 படகுகள் மாத்திரமே கடலுக்குச் சென்றது. இந்த நிலை இவ்வாறு காணப்பட்டால் எமது மக்களின் வாழ்வாதரம் என்ன நிலைக்கு செல்லும் என்பது தெரியாது.
எரிபொருள் நிலையத்தில் வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குகின்றனர். எம்மால் போத்தல்களில் எரிபொருள் பெற முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளோம்.
இந்த அரசாங்கம் வெறுமனே போக்குவரத்து தொடர்பில் மாத்திரம் கவனிக்கிறார்களே தவிர மீனவர்கள் தொடர்பிலும் அவர்களின் வாழ்வியில் தொடர்பிலும் எந்த கவலையும் இல்லை.
தொடர்ந்து இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் எமக்கு எந்த ஒரு தீர்வும் பெற்றுத்தருவதாய் இல்லை. கச்சத்தீவு தொடர்பாக தமிழ் தலைமைகள் மௌனம் காப்பதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.
உங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வடக்கு மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக பேசுங்கள். வடக்கு மக்களின் பொருளாதார, வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான பொறிமுறையினை வழங்க வேண்டும் என்றார்.