
இலங்கை,மே 25
நெறிமுறை (Ethical) தொடர்பிலான காரணங்களை சுட்டிக்காட்டி அவுஸ்திரேலிய வீரர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதனை ஆட்சேபித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கே மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் இலங்கையில் தற்போது நிலவுகின்ற பொருளதார மற்றும் அரசியல் நெருக்கடிகள், அவுஸ்திரேலிய வீரர்கள் இலங்கை வருவதற்கு நெறிமுறை ஆட்சேபனை தெரிவிக்க காரணமாக அமைகின்றது. எனினும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணமானது இந்த சுற்றுப் பயணத்திற்கு பொறுப்பாக இருக்கும் உயர் அதிகாரிகள் மேற்கொள்கின்ற தீர்மானத்திற்கு அமைவாக நடைபெறும் எனக் கூறப்படுகின்றது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை கடந்த வாரம் இலங்கையின் நிலைமைகள் குறித்து தமது அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்திருந்ததோடு, இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான தொடரினை நடாத்துவதற்கான பாதுகாப்பு காணப்படுவதனையும் உறுதி செய்திருந்தது.
அதன்படி பொது மக்களுக்கு நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு நிலவும் இரவு வேளைகளில் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20I தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.
இந்தப் போட்டிகள் பகல்வேளைக்கு மாற்றப்படும் எனக் கூறப்படுகின்றது.) அதேவேளை பொது மக்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற தற்போதைய சந்தர்ப்பத்தில் கண்டி, காலி என நாட்டின் வெவ்வேறு இடங்களில் கிரிக்கெட் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் விழுமியம் தொடர்பிலான கேள்விகளை அவுஸ்திரேலிய வீரர்கள் இடையே தோற்றுவிக்கின்றது.
கடைசியாக 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணி, இலங்கையில் மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே இலங்கையில் தற்போது நிலவும் சிக்கல் நிலை கொவிட்-19 வைரஸ் போன்ற மனித பேரவல நிலை (Humanitarian Crisis) இல்லை என்ற போதும், அவுஸ்திரேலிய வீரர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு தங்களால் முடிந்த உதவியை வழங்குவதனை எதிர்பார்க்க முடியும்.