முல்லைத்தீவில் தமிழக நன்கொடை உதவித்திட்டம் பகிர்ந்தளிப்பு!

இந்தியாவின் தமிழ் நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் இலங்கையில் வறுமையில் வாடும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அதன்படி மாவட்ட அரசாங்க அதிபர்களை இணையவழியில் சந்திப்பு நடத்திய உயர் அதிகாரிகள் மாவட்டத்தில் வறுமையில் உள்ள மக்களின் புள்ளிவிபரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளதுடன் மாவட்டத்திற்கான உலர் உணவு பொதிகளின் எண்ணிக்கை பால்மா பைக்கட்டுக்களின் எண்ணிக்கை தொடர்பில் தீர்மானித்துள்ளார்கள்.

அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 15, 857 குடும்பங்களுக்கு அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் 3, 964 குடும்பங்களுக்கு பால்மா பைக்கட்டுக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவை துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 1397 குடும்பங்களுக்கு அரிசியும், 349 குடும்பங்களுக்கு பால்மாவும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 1018 குடும்பங்களுக்கு அரிசியும், 254 குடும்பங்களுக்கு பால்மாவும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 2495 குடும்பங்களுக்கு அரிசியும், 624 குடும்பங்களுக்கு பால்மாவும், மணலாறு பிரதேச செயலர் பிரிவில் 1272 குடும்பங்களுக்கு அரிசியும், 317 குடும்பங்களுக்கு பால்மாவும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 4786 குடும்பங்களுக்கு அரிசியும், 1197 குடும்பங்களுக்கு பால்மாவும், கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 4889 குடும்பங்களுக்கு அரிசியும், 1223 குடும்பங்களுக்கு பால்மாவும் வழங்கப்படவுள்ளது.

குறித்த நன்கொடை உதவித்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு இருபது கிலோகிராம் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதன் முதற்கட்டமாக ஒரு குடும்பத்திற்கு பத்து கிலோகிராம் அரிசி வழங்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தில் மிகுதி வழங்கப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் நிறையுடைய பால்மா பைக்கட்டுக்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் கர்ப்பிணி பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் அல்லது 5 அகவைக்கு உட்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன் இதில் ஒரு குடும்பத்தில் குறிப்பிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் இருந்தால் ஒரு பால்மா பை மட்டும் வழங்கப்படவுள்ளது.

தமிழக அரசாங்கத்தால்  40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய உதவித் திட்டத்தின் முதற்தொகுதியாக இந்த பொருட்தொகுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *