கச்சதீவு தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர்? அ.அன்னராசா கேள்வி

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கச்சதீவு மீள இந்தியா பெறுவது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு இதுவரை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா கேள்வி எழுப்பினார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அவர் கூறிய கருத்து உண்மையா பொய்யா என்பது தொடர்பாகவோ அது எமக்கு சாதகமா பாதகமா என்பதைக்கூட அரசியல் தலைவர்கள் தயங்குகின்றீர்கள்.

உங்களுடைய தயக்கம் எங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை வெளிப்படையாகப் பேசுகிறார். நீங்கள் ஏன் மௌனமாக இருக்கிறீர்கள் உங்களால் அதனை வெளிப்படையாக கூற முடியாமல் இருக்கின்றதா என்பது மீனவ சமூகத்திலேயே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடற்றொழில் அமைச்சர் இந்த செய்தியை மறுத்திருந்தார். உண்மையாக அவருடைய கருத்தை நாம் வரவேற்கின்றோம்.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போது வடக்கு மாகாணத்தைப்

பிரதிநிதித்துவப்படுத்தும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களில் கடற்றொழில் அமைச்சரை தவிர ஒருவர் கூட இது தொடர்பில் பேசவில்லை.

ஏன் மௌனமாக இருக்கிறீர்கள். நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லையா? எங்கள் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தோடும் இந்திய அரசாங்கத்தோடும் பேசி முடிவு எடுக்காது இருந்தால், இந்த பிரச்சினையை தீர்க்க சொல்லி நாங்கள் வேறு யாரிடமும் கையேந்தி கேட்ப்போம். அப்போது எங்களுக்கு முட்டுக்கட்டை போடாதீர்கள்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் பிரச்சினைகளை பேசுங்கள். இல்லையே எங்கள் பிரச்சினையை நீங்கள் பேசாமல் விடுங்கள். நாங்கள் துறைசார் அதிகாரிகளுடன் பேசி தீர்வு காணத் தயாராக உள்ளோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *