வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா ஆரிய குளத்தில் வெசாக்கூடுகள் கட்டும் விவகாரத்தில் தனது அதிகார எல்லைகளை மீறி எதேச்சதிகார போக்கில் கூறிய விடயங்கள் ஊடக அறிக்கைகளாக வந்துள்ளன அவை மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
ஆளுநர் முதலில் ஆரிய குளத்தின் வரலாற்றை தெரியாதவராக இருக்க முடியாது அதே போல் யாழ் மாநகர சபை ஆரிய குளத்தில் எந்த மத அடையாளங்களுக்கும் இடமில்லை என தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இதுவும் ஆளுநருக்கு தெரியும் அத்துடன் மாநகர சபை ஒன்றை கலைப்பதாக இருந்தால் எவ்வாறான விதிமுறைகளின் அடிப்படையில் ஆளுநரால் கலைக்க முடியும் என்பதும் தெரியும் ஆனால் இவையாவும் தெரிந்தும் மாநகர சபையை கலைப்பேன் என அறிக்கை விட்டதன் நோக்கம் தனது பதவியை தக்க வைக்க தன்னை பௌத்த விசுவாசியாக ஆட்சியாளர்களுக்கும் தனது பொஸ்சிற்கும் காட்டுவதற்கு.
நாட்டில் பெரும் அவல நிலை ஏற்பட்டும் அதனை சிந்திக்காது வெசாக் கூடு கட்ட அனுமதிக்கவில்லை என்பதற்காக தனது சட்ட எல்லைகளை மீறி தெருச் சண்டியன் போல சாரத்தை மடிச்சுக் கட்டிக் கொண்டு கலைப்பன் விசாரணைக்குழு போடுவன் என்பதெல்லாம் ஆளுநரின் அற்பத்தனமான பதவி ஆசையை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த காலத்தில் இருந்த ஆளுநர்களுக்கு நடந்த வரலாறுகளை ஆராயத் தவறினால் ஆளுநர் ஐிவன் தியாகராசாவின் நிலை பரிதாபம் தான் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

