
ஜப்பானிடம் இருந்து நிதி பெறுவது தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவுக்கு வரும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் முக்கிய அபிவிருத்தி பங்காளிகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்வதாக தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை அரசாங்கம் பொருளாதாரத்தையும் நாட்டையும் ஸ்திரப்படுத்த முயற்சிக்கும் வேளையில் ஜப்பான் அதற்கு ஆதரவளிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
ஜப்பானின் டோக்கியோவில் இன்று (வியாழக்கிழமை) காணொளி அழைப்பின் ஊடாக நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 27ஆவது சர்வதேச மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு சாத்தியமான உதவிகளை ஆராயுமாறு ஜனாதிபதி உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து நட்பு நாடுகளுக்கும் மேலும் அழைப்பு விடுத்தார்.
குறித்த மாநாட்டில் மேலும் உரையாற்றிய அவர், “பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவத்துடன் புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமித்துள்ளோம். மேலும் தேசிய ஒருமித்த கருத்தை உருவாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து விவாதங்களை நடத்தி வருகிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத் துறையின் மெய்நிகர் மூடல் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் உள்நாட்டில் பணம் செலுத்துவதில் கூர்மையான சரிவு மற்றும் பிற நிகழ்வுகள் காரணமாக அதிகரித்த பணவீக்கம் மற்றும் கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது.
ஏப்ரலில் இலங்கையானது எமது கடனாளிகளுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த வெளிநாட்டு பொதுக் கடனை மறுசீரமைக்கும் நோக்கத்துடன் ஒரு ‘கடன் நிறுத்தத்தை அறிவித்தது. அதேநேரத்தில் பொருத்தமான வேலைத்திட்டத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தை அணுகியது.
எவ்வாறாயினும் அத்தகைய தீர்வுகளை நாங்கள் மேற்கொள்வதன் மூலம் அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதில் எங்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தில் உள்ள எமது நண்பர்களின் உதவி அவசரமாகத் தேவைப்படுகிறது.
ஜப்பான் இலங்கையின் முக்கிய அபிவிருத்தி பங்காளிகளில் ஒன்றாக உள்ளதுடன், ஜப்பானிடம் இருந்து நிதியை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும் என்று நம்புகிறோம்.
இந்த கடினமான நேரத்தில் நமது நாட்டிற்கு ஆதரவையும் ஒற்றுமையையும் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ஏனைய நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
உலகம் எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் இன்னும் பரவலான பிரச்சனை உணவுப் பாதுகாப்பைப் பற்றியது. எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளில் கூர்மையான அதிகரிப்பு என்பன பல நாடுகளுக்கு கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தும்.
எனவே இந்த முக்கியமான பிரச்சினையில் நாம் கவனம் செலுத்துவதும் முன்னுரிமை கொடுப்பதும் அவசியம்.
இந்தப் பிரச்சினையை நாம் வெற்றிகொள்வதை உறுதிப்படுத்துவதற்கு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது அவசியமாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.