
ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் என்ற அனுமானத்தில், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று காலை வங்கிகளின் தலைவர்களை சந்தித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்காலத்தில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் 70 அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் இலங்கை முதல் இடத்தில் இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க கூறினார். சர்வதேச வட்டி விகிதங்கள் உயரும் அபாயம் அதிகம்.
சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயமும் உள்ளது. இந்த நிலைமையை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்பாடு எட்டப்படும் வரை இந்தப் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வுகளை வழங்குவது கடினம் எனவும் இதற்கு மேலும் சில காலம் எடுக்கும் எனவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தியாவசிய வாடிக்கையாளர்களின் தேவைகளின் அடிப்படையில் கடன் ஒத்திவைப்பு நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கியாளர்கள் பலரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.