
கொழும்ப,மே 26
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறை மற்றும் சுகாதாரப் பிரச்சினைக்கு, ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையும் பொறுப்புக் கூற வேண்டும் என சுகாதார தொழில் வல்லுனர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தற்போதைய செயற்பாடுகள் காரணமாக, நாட்டில் மருந்து உற்பத்திக்கு தடை ஏற்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவிக்கின்றார்.
கொழும்பில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் செயற்றிறனற்ற பொறிமுறைகளின் ஊடாக, நன்கொடைகளைப் பெறுவதிலும் சிக்கல்கள் எற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு டொலருக்கு பெற முடியுமான மருந்துகளுக்கு, சுமார் 10 டொலர்கள் வரை செலுத்த வேண்டியுள்ளதாகவும், அது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆசிய பிராந்தியத்திலும், வளர்ச்சியடைந்த நாடுகளிலும் மருந்து மாபியாக்கள் செயற்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார் இதனால், மருந்துகளின் விலை பத்து மடங்கு அதிகரிப்பதாக சுகாதார தொழில் வல்லுனர்களின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.