80 வீதமாக குறைந்தது முட்டை பயன்பாடு; பெருமளவான கோழிப் பண்ணைகள் மூடல்

நாட்டில் மக்கள் கோழி முட்டைகளை பயன்படுத்துவது 80 வீதமாக குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சந்தையில் தற்போது ஒரு கோழி முட்டை 35 ரூபாவுக்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் கிராம மட்டத்தில் இயங்கி வந்த கோழிப் பண்ணைகளில் 80 வீதமான பண்ணைகள் முற்றாக மூடப்பட்டுள்ளன.

மிகப்பெரிய கோழிப் பண்ணைகளில் 50 வீதமானவை மாத்திரம் தற்போது இயங்கி வருகின்றன. அதேவேளை முட்டை உற்பத்திக்கான செலவு 35 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் ரத்நாயக்க கூறியுள்ளார்.

கோழிப் பண்ணை தொழிலுக்கு தேவையான பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளதால், கிராமங்களில் கிராமிய கைத்தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வந்த கோழிப் பண்ணை தொழிலுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக பாரம்பரியமாக கோழிப் பண்ணைகளை நடத்தி வந்த பலர், அதனை கைவிட்டு, கயிறு தயாரிப்பு போன்ற வேறு துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உட்பட நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை கோழி முட்டைகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் நிலைமை காணப்படுவதாகவும் சரத் ரத்நாயக்க கூறியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *