ஸ்டாலினின் கோரிக்கைக்கு தொழிலாளர் காங்கிரஸ் எதிர்ப்பு!

அரசு விழாவில் பங்கேற்பதற்காக நேற்றையதினம் சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் சார்பில் 5 கோரிக்கைகளை முன்வைத்தார்.

குறித்த கோரிக்கைகளில் ஒன்றாக, கச்சத்தீவினை மீட்டெடுத்து தமிழக மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் குறித்த கோரிக்கை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இ.தொ.கா. சார்பில் பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டீ.வீ. சென்னன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவும் , இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே கச்சைத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

அதேபோல் இலங்கையின் 13 ஆம் திருத்தசட்டமானது, இலங்கை சிறுபான்மையின மக்களுக்காக செய்துகொண்ட ஒரு ஒப்பந்தமாகும்.

இருப்பினும் இலங்கையில் பெரும்பான்மை இன தலைவர்களினால் இந்த 13 ஆம் சரத்து முழுமையாக நடை முறைப்படுத்தப்படவில்லை.

அதை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை சிறுபான்மையின தலைவர்களும் தமிழ் மக்களும் இந்தியாவிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் நீங்கள் கச்சைத்தீவை மீள பெற வேண்டும் என இந்திய பிரதமரிடம் கூறுவதனால், இலங்கை பெரும்பான்மை இன தலைவர்களினால் இந்த ஒப்பந்தம் மேலும் தட்டிக் கழிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எனவே இலங்கை மக்களுக்கு உங்களால் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்துவிட்டு சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு துணை போக வேண்டாம்.” என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *