சிற்றுண்டிகளின் விலை மீண்டும் அதிகரித்தது!

கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள அனைத்து சிற்றுணவகங்களிலும் சிற்றுண்டிகளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு நெருக்கடியின் காரணமாகவே விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய முட்டை ரொட்டி, தோசை 100 ரூபாவாகவும் பரோட்டா 50 ரூபாவாகவும் முட்டை ரொட்டி- கறி 150 ரூபாவாகவும், 3 பரோட்டா- கறி 200 ரூபாவாகவும், அரை பாண்-கறி 170 ரூபாவாகவும் அப்பம் 50 ரூபாவாகவும், முட்டை அப்பம் 100 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தேநீர் 50 ரூபாவாகவும், பால்தேநீர் 100 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

அத்துடன் றோல், பற்றிஸ், மரக்கறி ரொட்டி, முட்டை பணிஸ் உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை 100 ரூபா வரையிலும் அதிகரிக்க சிற்றுணவக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு, எரிவாயு நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளால் 65 சதவீதத்துக்கும் அதிகமான சிற்றுணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய சுயதொழில் புரிவோர் வர்த்தக சங்கத்தலைவர் பிரதீப் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *