மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிய யுவதி கைது!

வவுனியாவில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 21 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர்.

பண்டாரிக்குளம் நாவலர் வீதியில் வசிக்கும் முதிய பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக கடந்த புதன்கிழமை மருந்து எடுப்பதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

மருந்து எடுத்துவிட்டு குறித்த பெண் வைத்தியசாலையில் சிறிது இளைப்பாறி இருந்தபோது, அங்கு வந்த யுவதி குறித்த முதிய பெண்ணுடன் நீண்ட நேரமாக அனுதாபமாக உரையாடி, முதிய பெண் தொடர்பான தகவல்களை பெற்றுள்ளார்.

உடல் சுகயீனம் என்பதால் தனியாக வீட்டிற்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்த அந்த யுவதி, முச்சக்கர வண்டி ஒன்றில் முதிய பெண்ணின் வீட்டிற்கு அழைத்து சென்றதுடன், மயக்க மருந்து கலந்து சோடாவையும் பருக கொடுத்துள்ளார்.

வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் முதிய பெண் மயக்கமடைந்ததும், அவர் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என 7 அரைப் பவுண் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

மயக்கம் தெளிந்து குறித்த முதிய பெண் எழும்பியதும், நகைகள் திருட்டு போனதை அறிந்து கொண்டு உடனடியாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக ,வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, வவுனியா, மதீனாநகரில் வசித்து வந்த யாழ் பண்டதரிப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

திருடப்பட்ட நகையில் 4 அரைப் பவுண் நகை குறித்த யுவதியிடம் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் குறித்த யுவதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *