அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம்; இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்திற்கு கிடைத்த மகிழ்ச்சித் தகவல்

பிரியா – நடேசலிங்கம் என்ற இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தினரை தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் விடுவித்திருக்கிறது.

தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அவர்கள் முன்பு வாழ்ந்த பிலோலா பகுதியிலேயே வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புலம்பெயர்வு சட்டத்தில் உள்ள தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி இடைக்கால உள்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் அக்குடும்பத்தினருக்கு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளார்.

இதன் மூலம் அவர்கள் குடிவரவு நிலையில் உள்ள பிரச்சினை தீர்க்கப்படும் வரை அவர்கள் பிலோலா பகுதியிலேயே சட்டரீதியாக வசிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ் அகதி குடும்பம் பிலோலா பகுதிக்கு திரும்ப வேண்டும் பிலோலா பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ஆம் ஆண்டு படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013ஆம் ஆண்டு தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர்.

தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்திருந்தனர்.

அவுஸ்திரேலியாவின் பிலோலா நகரில் வசித்து வந்த அவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.

பின்னர், இவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த சூழலில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதன்பின் அவர்களை கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு சென்றது அவுஸ்திரேலிய அரசாங்கம். கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த போது இவர்களது இரண்டாவது குழந்தையான தருணிகாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த குடும்பம் அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர், கடந்தாண்டு முதல் பெர்த் நகரில் சமூகத் தடுப்பில் இக்குடும்பம் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது அவர்கள் பிலோலா பகுதிக்கு திரும்ப அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் அனுமதித்திருக்கிறது.

பிற செய்திகள்

  1. டெங்கு காய்ச்சலால் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு! – யாழில் சோகம்
  2. மன்னாரிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற மூவர் கைது!
  3. தயவு செய்து இலங்கைக்கு செல்லுங்கள்; வெளிநாட்டு மக்களிடம் ஜேர்மன் தம்பதி கோரிக்கை!
  4. எரிபொருள் நெருக்கடி; ரஷ்யாவின் உதவியை நாடும் இலங்கை
  5. ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு
  6. புதிய பிரதமரையும் நாடாளுமன்றத்தையும் தெரிவு செய்ய வேண்டும்! – அனுர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *