கச்சதீவு – வரலாற்று ஆவணம் தயாரிக்கும் அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணம், மே 28: தமிழகத்தின் தேர்தல் காலங்களில் ஒலிக்கும் கச்சதீவு மீட்பு கோசம் இலங்கையின் இப்போதைய நெருக்கடி காலத்தில் மீண்டும் தலை தூக்கியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்களால் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த கோசம் மே 27 இல் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்ட தமிழகத்து மேடையிலும் ஒலித்து, இலங்கை, இந்திய அரசியலை மேலும் பரபரப்பாக்கி உள்ளது.

பாரதப்பிரதமர் முன்னிலையில் உரையாற்றிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கச்சதீவு மீண்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வருவதே இலங்கை இந்திய மீனவர்களின் தொடர் சிக்கலுக்கு தீர்வாக அமையும் எனவும் இதுவே தமிழக மீனவ மக்களின் மத்திய அரசிடமான கோரிக்கை எனவும் பிரதமரிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக முதல்வரின் இந்த கோரிக்கைக்கு பிரதமர் மோடி எந்த பதிலும் அளிக்கா விட்டாலும் பிரதமர் தமிழகத்தை விட்டு சென்ற பின்னர் சென்னையில் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்த அண்ணாமலை தமிழகத்தின் தி.மு.க. அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் கடும் வார்த்தைகளால் விமர்சித்து கச்சதீவு மீட்பு விவகாரத்தை இலங்கை மக்களின் நலன் காக்கும் மத்திய பா.ஜ.க. அரசே பார்த்துக் கொள்ளும் எனவும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிடும் தகுதி அதற்கு இல்லை எனவும் தெரிவித்து விவகாரத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளார்.

முன்னரும் அவரது இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி கச்சதவை குத்தகை அடிப்படையிலாவது இந்தியா கையகப்படுத்திக் கொள்ள வேண்டும் என திமிர்தனமாக கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது “இது தொடர்பில் இந்திய இலங்கை அரசுகள் இடையே எதுவித கருத்து பரிமாற்றங்களும் இடம் பெறவில்லை எனவும் கச்சதீவால் அதிக நன்மை பெறுவது இந்திய மீனவர்களே எனவும் தெரிவித்தார்.மேலும் கச்சதீவின் வரலாற்று பின்னணி பற்றிய ஆதார பூர்வ ஆவணம் ஒன்று தன்னால் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் விரைவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட இதனுடன் தொடர்பு பட்ட அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

இன்றைய சூழலில் இலங்கைக்கு பலவழிகளிலும் உதவிகளை புரியும் இந்தியா அதனை முன்னிறுத்தி கச்சதீவை கோர முனைந்தால், பட்டினியாய் இருப்பவனுக்கு சாப்பாடு போட்டு விட்டு அவனது கிட்னியை எடுப்பதற்கு சமனாகவே அது அமையும் என ஆதங்கப்பட்டார் மீனவ தொழிலாளி ஒருவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *