கோட்டா கோ கம மக்கள் எழுச்சியின் 50ம் நாள் இன்று!

எழுச்சியின் ஆரம்பம்

உலகலாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோனா தொற்று பேரிடருக்கு பிற்பட்ட காலத்தில் உலகப் பொருளாதார சமநிலையும் ஆட்டம் கண்டது. அந்தவகையில் அபிவிருத்தி  அடைந்து வரும் நாடுகளில் ஒன்றான இலங்கையையும் கொரோனா தொற்றுக்கு பிற்பட்ட நிலையில் பொருளாதார நிலையிலும் கடும் சரிவினை சந்திக்கத் தொடங்கியது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையின்  வீழ்ச்சி, ஏற்றுமதி துறையின் சரிவு, உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் போன்ற காரணங்களால் இலங்கையின் பொருளாதாரம் சரிவடையத் தொடங்கியது.

மறுபுறம் அரசியல் ரீதியில் பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களை புறக்கணித்து தான்தோன்றித்தனமாக செயற்படும் அரச உயர்மட்டத்தினரின்  நடவடிக்கைகளும் பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு காரண கருத்தாவாக அமைகின்றது.

இவ்வாறான நிலையில் மறுபுறம் இலங்கை அரசினால் சரியான திட்டமிடலின்றி இரசாயன உரத்திற்கான தடை விதிக்கப்பட்டமையை தொடர்ந்து  விவசாயிகளின் வாழ்வாதாரமும் சீர்குலையத் தொடங்கியது. குறிப்பாக இரசாயன உரத் தடை காரணமாக விவசாய நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பமாக தொடங்கியது.

கொழும்பு  உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து விவசாயிகள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் தொடர் அழுத்தம் காரணமாக இரசாயன உரத்திற்கான தடையை கடும் நிபந்தனையின் கீழ் நீக்கியது.

அதேவேளை மறுபுறம் திட்டமிடப்படாத பொருளாதார கொள்கையால் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பும் வெகுவாக குறையத் தொடங்கியது. இதனால் உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் இலங்கைக்கு சிக்கல் ஏற்பட்டது.

இவ்வாறான நிலையிலும் பல்வேறு பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வித்துறை சார் விரிவுரையாளர்களும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் அவர்களது எச்சரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அரசாங்கத்தை கொண்டு செல்வதில் ஆளும் தரப்பு முனைப்பு  காட்டியது.

இந்நிலையில் கடந்த வருடத்தின் இறுதிக் காலப் பகுதியில் நாட்டின் டொலர் கையிருப்பு வெகுவாக குறைந்த நிலையில் எரிவாயு எரிபொருளை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டதோடு டொலர் பிரச்சினைக்கு தீர்வாக  அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளிடமிருந்து டொலர்களை கடனாக பெற்று எரிவாயு எரிபொருள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய தொடங்கியது.

இந்நிலையிலும் எரிவாயு மற்றும் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடுகள்ஏற்படத் தொடங்கியது. அதேவேளை எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கான விலைகளும் அடுத்தடுத்த பல்வேறு கட்டங்களாக அதிகரிக்கத் தொடங்கியது.

இவ்வாறான நிலையில் மக்களின் வாழ்வாதாரங்களும் கடுமையாக பாதிப்படைய தொடங்கியது. அதேவேளை அரிசி சீணி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரிக்க தொடங்கியது.

இவ்வாறான  திடீர் விலையேற்றங்கள் மற்றும் திட்டமிடாத  அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகவும் மக்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட தொடங்கினர்.

அதேவேளை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் இடம்பெற்றதோடு ஜனபதிபதியின் மிரிஹான இல்லத்தினையும் முற்றுகையிட்டு கடும் எதிர்ப்பு  போராட்டத்தை  முன்னெடுத்தனர்.

கோட்டா கோ கம உதயம்

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி பல்வேறு அமைப்புக்கள் சமயத் தலைவர்கள் இணைந்து கொழும்பு காலிமுகத்திடல் பகுதி மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்பாக ஏப்ரல் 9ம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது.

தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டதுடன் குறித்த ஆர்ப்பாட்டம் கோட்டபாய ராஜபக்ச பதவி விலகும் வரை தொடரவுள்ளதாகவும் அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கென கூடாரங்கள் மற்றும் இதர பொருட்களும் கொண்டுவரப்பட்டன.

இந்நிலையில் கொழும்பு  காலிமுகத்திடல் பகுதி ஆர்ப்பாட்டகாரர்களால் கோட்டா கோ கம என்றவாறாக பெயர் சூட்டப்பட்டதுடன் அதனை மும் மொழிகளிலும் காட்சிப்படுத்தும் பெயர்ப் பலகையும் திறந்து வைக்கப்பட்டது.

அதேவேளை கோட்டா கோ கமவிற்கு இன மத பேதங்களை தாண்டி பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கும் பொருட்டு நேரடியாகவே ஆர்ப்பாட்ட களத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் இணைந்தனர்.

கோட்டா கோ கம நிலையங்கள்

கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இரவு பகலாக தொடர்ச்சியாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு பல முன்னணி நிறுவனங்கள் கரம் கொடுத்தன. பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனி நபர்களால் ஆர்ப்பாட்காரர்களுக்கு உணவு வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்நிலையில் கோட்டா கோ கம போராட்டங்கள் காலிமுகத்திடலை தாண்டி இலண்டன் பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலும் கோட்டா கோ கம எழுச்சி எனும் பெயர் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

அத்துடன் கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களுக்கு மருத்துவ சேவை வழங்க கோட்டா கோ கம வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டது.

கோட்டா கோ கம விசேட நிலையங்கள்

  • கோட்டா கோ கம நூலகம்
  • கோட்டா கோ கம வைத்தியசாலை
  • கோட்டா கோ கம சட்ட உதவி மையம்
  • கோட்டா கோ கம ஊடக நிலையம்
  • கோட்டா கோ கம கலந்துரையாடல் நிலையம்
  • கோட்டா கோ கம மின்னுற்பத்தி நிலையம்
  • கோட்டா கோ கம குளியல் வசதி நிலையம்
  • கோட்டா கோ கம சர்வதேச ஊடக மையம்
  • கோட்டா கோ கம சிகை அலங்கரிப்பு நிலையம்
  • கோட்டா கோ கம சமையல் நிலையம்
  • கோட்டா கோ கம நடமாடும் சூரியசக்தி மின் நிலையம்
  • கோட்டா கோ கம விளையாட்டு திடல்
  • கோட்டா கோ கம நாடக அரங்கு
  • கோட்டா கோ கம கலாசார நிலையம்

இவ்வாறாக பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய நிலையில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நாளுக்க நாள் எழுச்சியடைய தொடங்கியது.

இவ்வாறான நிலையில் மே09ம் திகதி கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களத்திற்குள் புகுந்த அரச ஆதரவு வன்முறைக் குழுக்களால் கோட்டா கோ கம பகுதியில் பதற்ற நிலை உருவாக்கப்பட்டது. ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டதுடன் ஆர்ப்பாட்டகூடாரங்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த அசம்பாவித நிலையை தொடர்ந்து அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் உடனடியாகந நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியிலும் கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை வன்முறையாளர்களின் காட்டுமிராண்டிதனமான தாக்குதலால் அழிக்கப்பட்ட கூடாரங்கள் மீண்டும் அமைக்க்பபட்டதுடன் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

விழாக்கள் மற்றும் நினைவேந்தல்கள்

தமிழ்- சிங்கள புத்தாண்டு
வெசாக் நிகழ்வு
ஈஸ்டர் தாக்குதல் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
உயிரிழந்த ஊடகவியலாளர்களின் நினைவேந்தல்

போன்ற பல்வேறு நிகழ்வுகளும் இன் மத பேதமின்றி அனைவரும் இணைந்து முன்னெடுத்தனர். அதேவேளை முதன்முதலாக முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் காலிமுகத்திடலில் அனுஸ்டிக்ப்பட்டமை விசேட அம்சமாகும்.

இவ்வாறாக கடந்த சித்திரை 09ம் திகதி காலிமுகத்திடல் கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் பல்வேறு தடைகள் தாக்குதல்களுக்கு முகம்கொடுத்து எழுச்சியடைந்து இன்றுடன் 50வது நாளை நிறைவுசெய்துள்ளது.

கோட்டா கோ கம கடந்து வந்த தடங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *