யாழில் சினைப்பசுவை இறைச்சியாக்கிய கொடுமை – கண்டுகொள்ளாத பொலிஸார்!

நான்கு மாதங்களான சினைப் பசுவைத் திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்துள்ள கொடூரச் சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.

வயலில் கட்டப்பட்ட மாட்டை இரவோடிரவாகத் திருடியவர்கள், அதனை இறைச்சியாகியுள்ளனர்.

இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்குத் தெரியப்படுத்திய போதிலும், அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொன்னாலையைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர், நான்கு மாதங்களான சினைப்பசுவையும், ஏனைய மாடுகளுடன் வயலில் கட்டியிருந்தார். கடந்த சனிக்கிழமை சினைப்பசு காணாமற்போயிருந்தது. மறுநாள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பொன்னாலை பெரியகுளத்துக்கு அண்மையில், நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகே, மாட்டின் தோல், மாடு கட்டப்பட்டிருந்த கயிறு, எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அயல் ஊரைச் சேர்ந்த சிலர் மாட்டை இறைச்சியாக்கி, முச்சக்கரவண்டியில் ஏற்றிச்சென்று, விற்பனை செய்தமை பின்னர் தெரியவந்தது.

அது தொடர்பான தகவல்களையும் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர். எலும்பு, தோல் என்பவற்றை வீட்டுக்குக் கொண்டுசென்று வைத்திருங்கள். நாங்கள் விசாரணை நடத்துகின்றோம் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

எனினும் அவர்கள் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனையடுத்து, மாட்டின் உரிமையாளர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *