இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ராஜஸ்தான் அணி: பெங்களூர் அணிக்கும் மீண்டும் ஏமாற்றம்!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிப் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

அஹமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ராஜட் படிதார் 58 ஓட்டங்களையும் டு பிளெஸிஸ் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், பிரசீத் கிருஸ்ணா மற்றும் ஒபெட் மெக்கோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் போல்ட் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 106 ஓட்டங்களையும் சஞ்சு சம்சன் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சில், ஜோஸ் ஹெசில்வுட் 2 விக்கெட்டுகளையும் வனிந்து ஹசரங்க 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 60 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 10 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *