
யாழ், மே 28
யாழில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். உடுவிலைச் சேர்ந்த பரசுதன் யோயிதா (வயது-5) என்ற சிறுமியே உயிரிழந்தார்.
சிறுமிக்கு கடந்த 23ஆம் திகதி மாலை காய்ச்சல் இருந்துள்ளது. பின்னர் பனடோல் மாத்திரை வழங்கப்பட்டதனால் ஒரளவு சுகம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் கடுமையான காய்ச்சல் காரணமாக இணுவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகள் வழங்கப்பட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அன்றைய தினம் இரவு சிறுமிக்கு காய்ச்சலும் வாந்தியும் அதிகரித்ததால் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலையைக் கருத்திற்கோண்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறுமி சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுமி உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.