நாட்டில் தற்போது எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்நிலையில் எரிபொருளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக திடீர் சோதனை நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் 11 பரல்களில் எரிபொருள்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 பரல்களில் மண்ணெண்ணெய், 2 பரல்களில் பெற்றோல் மற்றும் ஒரு பரல் டீசல் என்பனவே கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் உள்ள வீடொன்றோடு இணைந்த கடை ஒன்றிலிருந்தே இன்று மாலை இவ்வாறு எரிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பெற்றோல் ஒரு லீற்றர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.
சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில் மண்ணெண்ணெய் சுமார் ஆயிரத்து 600 லீற்றர், பெற்றோல் சுமார் 400 லீற்றர் டீசல் சுமார் 200 லீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





