இந்தியா-வங்காளதேசம் இடையே இன்று முதல் விரைவு ரெயில் சேவை

கொல்கத்தா, மே 29: கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா வங்காளதேசம் இடையே மூன்று ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது இரு நாடுகளிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில், இன்று முதல் இரு நாடுகளுக்கும் இடையே பயணிகள் ரெயில்கள் மீண்டும் மீண்டும் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா – டாக்கா இடையே, கொல்கத்தா மைத்ரீ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும், கொல்கத்தா – குல்னா இடையே கொல்கத்தா பந்தன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் இன்று மீண்டும் தொடங்குகிறது என்று கிழக்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கூறியுள்ளார்.

இதன் மூலம் இரு நாடுகளிலும் உள்ள பயணிகள் பயனடைவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நியூ ஜல்பைகுரியில் இருந்து டாக்கா வரை மிதாலி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *