பண்டாரகம அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா எனும் குறித்த சிறுமி நேற்றுமுன்தினம் (27) அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில் அவரை சிறுமியின் தாய் தேடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த கோழி இறைச்சிக் கடைக்கு முன்னாலிருந்த CCTV கெமராவை சோதனையிட்டபோது, சிறுமி கடைக்கு வந்து 10.12 மணிக்கு மீண்டும் திரும்பிச் செல்வது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாணந்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் அவர்களுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றுமாலை குறித்த சிறுமிஇ அவரது வீட்டிற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் சதுப்பு நிலமொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
அங்கஜன் இராமநாதன் எம்.பி இரங்கல்!
பண்டாரகம – அட்டுலுகம பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா, நேற்றைய நாளில் காணாமல் போயிருந்த நிலையில் இன்று கொடூரமாக கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.இந்த பிஞ்சு உயிரை கொலைசெய்த மனிதத்தன்மையற்ற அந்த கொடூரவாதிகள் இனங்காணப்பட்டு சட்டத்தின் உயர்ந்தபட்ச தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும்.பாத்திமா ஆயிஷாவின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதோடு, அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சாணக்கியன் எம்.பி இரங்கல்!
அமைதியாக இருங்கள் குட்டி ஆயிஷா. உங்களையும் எங்களின் வருங்கால சந்ததியையும் பாதுகாக்க நாங்கள் தவறிவிட்டோம். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அவர்களின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக சிறிய மற்றும் அற்பமான வரவுசெலவுத்திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச எம்.பி இரங்கல்!
சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது அனுதாபங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்க உரிமை உண்டு! குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அல்லது துஷ்பிரயோகம் எந்த வகையிலும் அனுமதிக்கப்படாது மற்றும் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்! அவள் ஆன்மா சாந்தி அடையட்டும் 🙏🏽😔


