உடப்பில் கடலரிப்பு தீவிரம்; மீனவர்கள் பாதிப்பு!

புத்தளம் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் ஒன்றான உடப்பு பகுதியில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக, அப்பகுதியிலுள்ள மக்கள் மற்றும் மீனவர்கள் தொடர்ந்தும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கடலரிப்பின் உக்கிரத்தால் இந்தப் பகுதியிலுள்ள ஒரு வீடு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு வீடுகளும், நான்கு மீன் வாடிகளும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன் கடலரிப்பு காரணமாக உடப்பு பகுதியில் உள்ள கரையோர வீதிகளும் கடுமையாக சேமடைந்து காணப்படுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்தோடு, மீனவர்கள் தங்களின் படகுகளை கரையோரங்களில் நிறுத்தி வைக்க முடியாத நிலையில் கடலரிப்பின் அகோரம் காணப்படுவதாகவும் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

உடப்பு கிராமத்தில் வாழும் மக்கள் மீன்பிடித் தொழிலை ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வரும் நிலையில், இவ்வாறு கடலரிப்பால் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதிலும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

அண்மைக்காலமாக உடப்பு பிரதேசத்தில் கடலரிப்பு மிகவும் தீவிரமடைந்துள்ளதால், அதனைத் தடுக்கும் தற்காலிக நடவடிக்கையாக கரையோரைப் பகுதிகளில் மணல் நிரப்பப்பட்ட மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றன.

அத்துடன், கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் தற்காலிகமாக பாரிய கருங்கற்களை கொண்டுவந்து அரிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் தடுப்புக்காக போட்டாலும் அது பாதுகாப்பதற்கு போதுமானதாக இல்லை என உடப்பு பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், பாரிய கருங்கற்களை போட்டாலும் கடலரிப்பின் தீவிரம் இன்னமும் குறையவில்லை எனவும் அவை அதிகரிக்கொண்டே செல்வதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, குறித்த கடல் அரிப்பு காரணமாக உடப்பு பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலமும் சேதமடைந்துள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த பாலத்தின் மூன்று இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளதுடன், பாலத்திற்கு அருகே பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள கருங்கற்களும் உடைந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதாகவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த வெள்ள நீரை கடலுக்குள் அனுப்பும் நோக்கில் உடப்பையும் ஆண்டிமுனையும் இணைக்கும் முகத்துவாரம் பாலத்திற்கு கீழாக வெட்டப்பட்டமையே இந்த பகுதி இவ்வாறு கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, கடலரிப்பினால் உடப்புக் கிராமத்தின் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் மீன் வாடிகளை கடல் அலைகள் இரவோடு இரவாக சுருட்டி விடுமோ என்கின்ற அச்ச நிலையில் இந்தப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடல் அரிப்பு அதிகரித்துவருவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அக்கறையின்றி உள்ளதாக குற்றம் சாட்டும் மக்கள், இதனால், தங்கள் வாழ்விடத்தையும், தொழில்வாய்ப்புக்களையும் இழக்க நேரிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, உடப்பு கரையோர பிரதேசம் முழுமையாக அழிவடையும் முன்னர் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் முகமாகவும் இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கடல் அரிப்பைத் தடுக்கவும் கருங்கற்களைக் கொட்டி தடுப்புக்களை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்களும், மீனவர்களும் கோரிக்கை விடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *