ஈழத் தமிழர்கள் கேட்பதற்கு நாதியற்றவர்கள்; நான்கு சுவற்றுக்குள் கண்ணீர் வடிக்கும் இலங்கையர்கள்!

கடல் வழியாக இந்தியாவிற்கு சென்றமையாலும், இந்திய கடவுச்சீட்டு பெறுவதற்கு முயற்சித்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு இன்றுவரை தமிழக சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள், தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து, இன்று 10வது நாளாக உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்று வருடங்களாக தடுத்த வைக்கப்பட்டுள்ள நாம் எமது குடும்பங்களோடு சேர்ந்து வாழ உதவுங்கள் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

மதிப்புக்குரிய எங்கள் உலக வாழ் தமிழர்களே. மிகமிக எங்கள் நெருக்கமானவர்களும் நாங்கள் சோர்ந்து போகும் போது, தோல்வி அடையும் போது எங்கள் அருகில் இருந்து எங்களுக்கு உதவும் நிறைந்த இரக்கமுள்ள, எங்கள் உலக தமிழர்களுக்கு வேதனையோடு கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈழத் தமிழரது வாழ்க்கை போராட்டம் என்பதற்காகவே தொடங்கப்பட்டது. இல்லையென்றால் போராடுவதற்கு பிறந்தவர்கள் என்று அறியாமல், இல்லை கடவுள் எழுதப்பட்ட விதி என்று தெரியாமல் தொடர்ந்து எங்கள் வாழ்க்கைக்காக போராடி கொண்டிருக்கிறோம்.

இன்று 10வது நாளாக நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தில், இந்த பட்டினி போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறோம்.

எங்களில் 10 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தாலும், இரண்டு நாள் மட்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , அவர்களது விருப்பம் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். நீதியற்ற செயலாகவும் கருதப்படுகிறது.

இத்தனை வருடங்களாகியும், எங்கள் குடும்பங்களை பிரிந்து, எங்கள் குழந்தைகளை பிரிந்து, இத்தனை வேதனைக்குள்ளாக்கி வறுமையிலும், கொடுமையிலும் வாழ்கிறோம்.

இன்னும் விடுதலை கிடைக்காமல் இந்த திருச்சி சிறப்பு முகாமை, வெளிநாட்டவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இத்தனை கொடுமைகளுக்கும் ஒரே ஒரு காரணம் தான்.

ஈழத் தமிழர்கள் என்பவர்கள் கேட்பதற்கு நாதி அற்றவர்கள், அவர்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை என்பதுதான், எங்களுக்கும் சில கணம் தனிமையிலே நாங்கள் அந்த இருளிலேயே தூங்கும் பொழுது அந்த நாலு சுவற்றுக்குள் எங்கள் குடும்பங்களை நினைக்கும் பொழுது உண்மைதான், நாங்கள் கேட்க நாதியற்றவர்கள் எனத் தோன்றும் பொழுது, எத்தனை முறை அந்த நான்கு சுவற்றுக்குள் நாங்கள் அழுது இருப்போம் என்று எண்ணிப்பார்க்க முடியாது. – என்றுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *