
தயவு செய்து பழைய விலையில் எரிபொருளை அரசு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என யாழ் மாவட்ட கடல் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு மீனவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்:
2,000 ஆம் ஆண்டு யுத்தகாலத்தில் தண்ணீரில் வலித்த படி, கட்டுமரத்தில் தொழில் செய்யும் நிலை தான் இனி எமக்கு ஏற்படப் போகின்றது.
எரிபொருள் பிரச்சினை காணப்படுகிறது. எரிபொருளும் இல்லை. அதிக விலைக்கு எரிபொருளை வாங்கி தொழில் செய்து, குறைந்த விலைக்கு மீனை விற்பனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2 லீற்றர் எரிபொருளை பயன்படுத்தி ஒன்றுமே செய்ய முடியாது. ஆகவே 3 கிலோ தொடக்கம் 4 கிலோ வரை மட்டுமே மீன்கள் கிடைக்கிறது. அதை ஏற்றுமதி செய்ய முடியாது.
எமக்கு பழைய விலையில் எரிபொருள் வேண்டும். முன்னர் 87 ரூபாய்க்கு எரிபொருள் வழங்கப்பட்டது. நாளொன்றுக்கு உழைக்கும் பணம் அன்றாட வாழ்க்கை செலவுக்கே போதாது. ஒரு கிலோ சூடை மீன் 300 ரூபாவுக்கு விற்பனை செய்யவேண்டிய நிலையில் உள்ளோம்.- என்றார்.