
” என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், எதிரணியில் இருந்தாலும் மக்களுக்கான எனது சேவைகள் தொடரும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மலையகத் தமிழர்களின் அரசியல் காவலனாக கருதப்படும் ,அமரர் ஆறுமுகன் தொண்டமானின், 58 ஆவது ஜனன தினம் இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் மலரஞ்சலி, செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .மேலும் அவர் தெரிவிக்கையில்
” அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வெற்றிடத்தை எவராலும் நிரப்பமுடியாது. மக்களை மட்டுமே எனக்கு தந்துவிட்டு சென்றுள்ளார். அது போதும். அதுவே மிகப்பெரிய செல்வம். எனவே, எனது மக்களுக்காக என்னால், எமது ஸ்தாபனத்தால் செய்யக்கூடிய அனைத்தையும் நிச்சயம் நான் செய்வேன்.
அரசாங்கத்தில் பதவிகளை வகித்தாலும், இல்லாவிட்டாலும்கூட மக்களுக்கான சேவைகள் தொடரும். எனவும் குடும்பம் என்றால் பிரச்சினைகள் இருக்கவே செய்யும். எமக்குள்ளும் பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றை பேசி தீர்க்கலாம்.
அதைவிடுத்து பிரச்சினையை பெரிதுபடுத்தினால், அது எமக்கான அழிவு பாதையாகவே அமையும்.” என்றும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார் .