
அரசியல்வாதிகளால் முன்னெடுக்க முடியாத பல விடயங்களை, எதிர்காலத்தில் வடக்கு, தெற்கு தொழில்சங்கங்கள் இணைந்து பேசி, பிரச்சினைகள் தொடர்பில் வெளிக்காட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஜோசப் ஸ்ராலின் தலைமையில், தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றுகூடல், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் தொடர்பில் ஊடங்களுக்கு சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் அதிலே வடக்கு, கிழக்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம், அத்துடன் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் போன்ற விடயங்கள் தொடர்பில் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்காலத்தில் வடக்கு தொழில் சங்கங்கள் மற்றும் தெற்கு தொழில்சங்கங்கள் இணைந்து பேசி, எமது பிரச்சினைகள் தொடர்பில் வெளிக்காட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுத்து, அரசியல்வாதிகளால் முன்னெடுக்க முடியாத பல விடயங்களை அடிமட்ட மக்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டும். இதன் மூலம் சுயநிர்ணயத்துடன் பல்லின மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சந்தர்ப்பத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதே எமது எல்லோரினதும் நோக்கம்.
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, காணி சுவீகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இனிவரும் காலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இப்போது பெற்றோல் ஒரு லீற்றர் 450 ரூபாவாக இருந்தாலும் தமிழ் மக்கள் 5 ஆயிரம் ரூபாய்கு வாங்கிய காலமும் உண்டு. இவ்வாறான துன்பங்களை தமிழ் மக்கள் ஏற்கனவே பார்த்து விட்டனர்.
கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையை காரணம் காட்டி இப்போது 2 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டும், விசாரணைக்கு அழைக்கப்பட்டும் உள்ளனர்.
கோட்டாவை மக்கள் வெளியேற சொல்லிவிட்டனர். ஆனாலும் அரசின் சதி தொடர்கிறது. கோட்டா ரணில் அரசு வெளியேற வேண்டும் அதை தான் நாமும் மக்களும் எதிர்பார்க்கின்றோம்.
ஆகவே அதற்கான போராட்டங்களை புதிய வடிவத்தில் தமிழ்மக்களையும் இணைத்து முன்னெடுப்போம்.- என்றார்.