கச்சதீவை இந்தியாவிடம் வழங்கினால் வடக்கு, கிழக்கு மீனவர்களின் நிலைமை இன்னும் மோசமடையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் தற்போது மன்னார் கடற்கரை முதல் பருத்தித்துறை கடல் வரை அத்துமீறிய பீன்பிடியில் ஈடுபடுவதனை காணக்கூடியதாக உள்ளது.
மீன் வளங்களை அழிப்பதுடன், தொழில் வளங்களையும் அழிக்கிறார்கள், எனவே கச்சதீவினை இந்தியாவிற்கு கொடுப்பது சரியான நிலைப்பாடு அல்ல என்பதே எனது கருத்து.
இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கையின் சிறிமாவோ பன்டாரநாயக்காவிற்கும் இடையில் 50 வருடங்களின் முன்பு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையிலேயே, கச்சதீவு இலங்கையிடம் இருந்து வருகின்றது. ஆகவே மீண்டும் இந்த விடயத்தை தொடக்கி விடுவது ஓர் சர்ச்சையாகவே காணப்படுகின்றது.
21 ஆவது அரசியலமைப்பு என்பது ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்த விடயங்கள், இதில் உள்ளடக்கப்படாமல் இருந்தால் அதனை ஆதரிப்பது என்பது கஷ்டமான விடயமாகும். அந்தவகையில் இது தொடர்பான நிலைப்பாட்டினை அரசாங்கம் எடுக்கவில்லை.
இந்த விடயத்தினை கொண்டு வருவதென்றால், 13 ஆவது திருத்தத்தினை இல்லாமல் செய்ய வேண்டும், மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்ய வேண்டும், தேர்தல் முறைமையினை இல்லாது செய்ய வேண்டும்.
இவ்வாறாக தமிழ் மக்களை பாதிக்கின்ற கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. எனவே தமிழர்களுக்கான ஒரு நியாயமான ரீதியில் முடிவினை தருவார்கள் என்பதனை நம்பவில்லை.- என்றார்.
பிற செய்திகள்