போராட்டக்காரர்களின் கோரிக்கையை அரசு உடனடியாக செவிமடுக்க வேண்டும்! கரு ஜயசூரிய

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிமடுக்க வேண்டும் என்று கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

நீதியான சமூகமொன்றுக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போராட்டக்காரர்கள் எதிர்பார்க்கும் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்தாது நாட்டுக்கு சிறந்த எதிர்காலமொன்றை உருவாக்க முடியாது என்பதை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் புரிந்து வைத்துள்ளனர்.

அதன் காரணமாகவே ஐம்பது நாட்கள் கடந்தும் மக்கள் ஆதரவுடன் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்கக் கூடியதாக உள்ளது.

அதுமாத்திரமன்றி அண்மைக்காலத்தில் எந்தவொரு போராட்டத்தினாலும் பெற்றுக் கொள்ள முடியாத பல விடயங்களை நாட்டு மக்களுக்கு இந்தப் போராட்டம் வென்று கொடுத்துள்ளது.

அதுபோன்றே இந்நாட்டில் நிகழ வேண்டிய அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புகள் தொடர்பில் இன்றும் அவர்கள் பலமாக முன்னின்று போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக செவிமடுக்க வேண்டும்.

அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாது இந்நாட்டில் எதுவித சிறந்த வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவும் முடியாது.

அதில் பலனும் இருக்காது என்றும் கரு ஜயசூரிய தொடர்ந்தும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *