ஆயிஷா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதா?- பொலிஸ் அதிகாரி வெளியிட்ட தகவல்!

பண்டாரகம – அட்டலுகம பகுதியில் சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான பாரியளவிலான ஆதாரங்களை அழித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சதுப்பு நிலத்தில், பல்வேறு நபர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட கால்த் தடங்கள் காணபட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

சடலம் கண்டெடுக்கப்பட்டவுடன், குறித்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் செய்தி அறிந்த ஏராளமான கிராம மக்களும் பல்வேறு இடங்களில் இருந்து சிறுமியின் உடலைப் பார்க்க வந்ததாக அதிகாரி கூறினார்.

இதன் காரணமாக சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அல்லது பலரை கைது செய்வதற்கான இலகுவான வாய்ப்புகள் தவறவிடப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதன்காரணமாக சிறுமியின் சடலத்தை தடயவியல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் (28) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *