
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதை தொடர்ந்து பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும் இதுவரை எவ்விதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை.
மறுபுறம் தற்போது அமுலிலுள்ள 20வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை நீக்கி 21வது சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் அரச மற்றும் எதிர்த்தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் 21ஆம் திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பில் இன்றையதினம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பானது இன்று பிற்பகல் 4 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை 21ஆம் திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பில் ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய சந்திப்பில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.