ஐ.பி.எல்.: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் கிண்ணத்தை வென்றது குஜராத் டைடன்ஸ் அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இதன்மூலம் அறிமுக ஆண்டிலேயே சம்பியன் கிண்ணத்தை வென்ற மகத்தான பெருமையை குஜராத் டைடன்ஸ் அணி பெற்றுள்ளது.

அஹமதாபாத் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களையும் ஜெய்ஸ்வால் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும், மொஹமட் ஷமி, யாஸ் தயால், ரஷித்கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 131 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணி, 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், குஜராத் டைடன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்ட்யா 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட், பிரசீத் கிருஸ்ணா மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்ட்யாவும், தொடரின் நாயகனாக ஜோஸ் பட்லரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *