அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைத்திருந்த மேலும் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 28 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட 38 சுற்றிவளைப்புகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
சந்தேகநபர்களிடம் இருந்து 814 லீற்றர் 800 மில்லிலீற்றர் பெற்றோல் மற்றும் 4,328 லீற்றர் 500 மில்லிலிற்றர் டீசல் என மொத்தமாக கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சுமார் 450 வாகனங்கள் இரண்டு முறை அல்லது அதற்கு மேல் எரிபொருள் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அந்த வாகனங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்ஸ் மூலம் ஆயிரத்துக்கு 400 இற்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ,2 ஆயிரத்து 800 வாகனங்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எரிபொருள் நிரப்புவதை அவதானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.