ரணிலுக்கு அவசர கடிதம் எழுதிய மனோ!

நாட்டில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை ஏற்கனவே வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் தோட்டங்களில் வாழும் மக்கள் மத்தியில் உணவு பஞ்சம் ஏற்படலாம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

நுவரெலியா, கொழும்பின் அவிசாவளை, பதுளை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, மாத்தளை, களுத்துறை, காலி, மாத்தறை, மொனராகலை, குருநாகலை ஆகிய மாவட்ட பெருந்தோட்டங்களில் வாழும் உழைக்கும் மக்கள் வருமானமின்றி நிர்க்கதி நிலையில் ஏற்கனவே பெருந்துன்பங்களை சந்தித்து வருகிறார்கள்.

நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடியினால், இன்னமும் சில மாதங்களில், உண்ண உணவின்றி நம் நாட்டில் பட்டினி சாவை சந்திக்க கூடியவர்களாக கணிக்க கூடியோர் பட்டியலில் முதன்மை நிலையில் இருப்போர் இவர்களே.

“தொழிலாளர்கள்” என்ற அடையாளத்தால் இவர்களுக்கு முறையாக சமுர்த்தி கொடுப்பனவுகள் கிடைப்பதில்லை. கிடைக்காத சம்பள கணக்குகள் காரணமாக இவர்கள் வறுமை கோட்டுக்கு கீழே இல்லை என்ற போலி புள்ளி விபரங்கள் காரணமாக இவர்களுக்கு நியாயம் எப்போதும் கிடைப்பதில்லை.

உண்மையில் கீழே ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் இந்த மக்களே வறுமை கோட்டுக்கு வாழ்கிறார்கள். மானிய விலையில், கோதுமை மாவு தருகிறோம், மண்ணெண்ணெய் தருகிறோம் என்று காலத்துக்கு காலம் சொல்லப்பட்டாலும் கூட எதுவும் உருப்படியாக கிடைப்பதில்லை.

ஆகவே தோட்டங்களில் அடாத்தாக கிடக்கும் தரிசு காணிகளை பிரித்து, தோட்டங்களில் நிரந்தரமாக உழைக்கும் மக்களுக்கு வழங்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன்.

இந்த நிலங்களில் குறுகிய காலத்தில் பயன் தரும் விளைபயிர்களை கடும் உழைப்பாளிகளான இந்த உழைக்கும் மக்கள் பயிரிட்டு தங்கள் வீட்டு தேவைகளுக்கு பெற்றுக்கொள்வார்கள்.

அதேபோல் நாட்டின் உணவு தேவைக்கும் இந்த பயிரிடல் கணிசமான பங்களிப்பை வழங்க முடியும். விவசாய அமைச்சின் அனுசரணையும் வழங்க பணிப்புரை விடுக்கும்படி கோருகிறேன்.

அவ்வாறாயின் குறுகிய காலத்தில் பயன் தரும் உணவு பயிர்களை பயிரிட உரிய ஆலோசனைகளையும், ஒத்தாசைகளையும் அவர்களால் பெற முடியும்.

நான் மேலே குறிப்பிட்ட மாவட்டங்களுக்குள் வரும் பிரதேச செயலாளர்களை அழைத்து அவசர கலந்தாலோசனையை ஏற்பாடுமாறு அன்புடன் கோருகிறேன்.

தோட்ட பிரதேசங்களில் நிலவும் வரலாறு காணாத அசாத்திய வறுமை காரணமாக அங்கே தங்களது ஆட்சியின் கீழ் பட்டினி சாவுகள் நிகழ முன்னர் இதை நீங்கள் செய்வீர்களாயின் மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன் எனஅக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *