இராமேஸ்வரத்தில் இரண்டாவது நாளாக உள்வாங்கிய கடல்

சென்னை, மே 30

இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல் இன்று இரண்டாவது நாளாக் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சத்துடன் புனித நீராடினர்.

இராமேஸ்வரத்திற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்வர்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் இராமேஸ்வரம் மட்டுமின்றி தங்கச்சிமடம் பேக்கரும்பில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமர் கோயில், முகுந்தராயர் சத்திரம் ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் அக்னி தீர்த்தக் கடல், முகுந்தராயர் சத்திரம், மீன்பிடித் துறைமுகம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக அக்னி தீர்த்தக் கடல் நேற்று 100 மீட்டர் தூரம் உள்வாங்கியது. அப்பகுதி சேறும், சகதியும், பவளப் பாறைகளுமாக காட்சியளித்தது. இதனால், அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் அச்சத்துடன் புனித நீராடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *