கல்முனையில் காணாமல் போன சிறுமியை 24 மணித்தியாலத்திற்குள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு கல்முனை பொலிஸார் திங்கட்கிழமை(30) இரவு மீட்டுள்ளனர்.
கல்முனை – இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் காப்பகத்தில் இருந்த சிறுமியொருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) மதியம் 2.30 மணியிலிருந்து காணாமல் சென்றிருப்பதாக பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் மாலை முறைப்பாடு செய்திருந்தனர்.
குறித்த காப்பகத்தில் ஒரு வருடமாக தங்க வைக்கப்பட்டிருந்த இச்சிறுமி பலரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் , வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் குறித்த காப்பகத்தில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்தார்.
மேலும் இச்சம்பவத்தில் காணாமல் சென்றவர் நிந்தவூர் 2 இமாம் கஸ்ஸாலி வீதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க வதுர்தீன் பாத்திமா சஜானா என்பவராவார்.
இந்நிலையில் குறித்த சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த காப்பகத்தில் சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (29) அன்று பகல் உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும், பின்னர் திடீரென அங்கிருந்து காணாமல் சென்று விட்டதாக பாடசாலை காப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பகுதியில் வைத்து திங்கட்கிழமை (30) இரவு குறித்த சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமி திங்கட்கிழமை (30) இரவு கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உரிய தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சிறுமி தனது வாக்குமூலத்தில் தனது விருப்பத்தின் பேரில் குறித்த காப்பகத்தில் இருந்து தப்பி சென்றதாக குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


