வவுனியாவில் மற்றுமொரு சிறுமி சடலமாக மீட்பு

வவுனியா கணேசபுரம் 8 ஆம் ஒழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ராசேந்திரன் யதுசி (வயது–16) என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
தாய் தந்தையை இழந்த நிலையில் மாமனாருடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று நண்பகல் தனியார் கல்வி நிலையம் சென்ற நிலையில் மாலை வரை வீடு திரும்பவில்லை.

இதயைடுத்து குறித்த சிறுமியை தேடிய உறவினர்கள் காணாது நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாட்டுக்கமைய நெளுக்குளம் பொலிஸார், உறவினர்கள் மற்றும் அயலவர்கள் சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது அந்தப் பகுதியிலுள்ள மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து இரவு 7.30 மணியளவில் சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் முறைப்பாட்டுக்கமைய வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடவியல் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து அப்பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது கிணற்றிலிருந்து 50 மீற்றர் தூரத்திலுள்ள மரத்தின் கீழ்பகுதியில் சிறுமியின் காலணி மற்றும் புத்தகங்கள் மீட்கபட்டது.

அத்துடன் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மோப்ப நாய் கிணறு அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள காணியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தஞ்சம் அடைந்திருந்தது. குறித்த பாவனையற்ற வர்த்தக நிலையத்தில் மதுபான போத்தல்கள் மற்றும் கயிறு என்பன காணப்பட்டுள்ளன
அதன் பின்னர் குறித்த வர்த்தக நிலையத்தின் வீட்டாரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இரவு 11.45 மணியளவில் கிணற்றில் காணப்பட்ட சிறுமியின் சடலத்தை மீட்டெடுக்கும் பணியில் தடவியல் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்திருந்ததுடன் பொதுமக்களின் உதவியுடன் சிறுமியின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.

குறித்த பகுதியில் இராணுவத்தினர் பாரியளவில் குவிக்கப்பட்டமையினால் அவ்விடத்தில் சற்று பதற்ற நிலமை காணப்பட்டதுடன் சடலம் பிரதே பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

சிறுமியின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரே மரணத்துக்கான காரணம் தொடர்பில் தெரிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாருடன் இணைந்து தடயவியல் பொலிஸர் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *