எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்
ஆசன ஒதுக்கீட்டுக்கான ரயில் கட்டணம் மாத்திரமே தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருட்களின் விலை அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு, பொது ரயில் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்யுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்
அத்துடன், ரயில்வே துறைக்கு இலாபங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், மாற்றுவழிகள் குறித்து சிந்திக்குமாறு தான் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, பெரும்பாலான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே, கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிக்க முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற சந்தர்ப்பத்தில், கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணத்தால், கருப்புச் சந்தை உருவாகும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்