அவுஸ்ரேலியாவில் போராட்டம்: முடக்கக் கட்டுப்பாடுகள் நீடிக்க வாய்ப்பு !

அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது மிக அதிகளவிலான நாளாந்த நோயாளிகளின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் முடக்கத்திற்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் புதிய அலை ஏற்படும் என்ற அச்சம் காணப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக தான் வெறுப்படைந்ததாகவும் இதனால் தனது இதயமே உடைத்துபோனது என மாநிலத்தின் முதலவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மட்டும் அங்கு 141 நோயாளிகள் பதிவாகியதாகவும் இதற்கு முந்தைய நாள் 163 ஆக இருந்தது என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஜூன் மாதம் முதல் டெல்டா மாறுபாட்டை கட்டுப்படுத்த போராடிவரும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 2,081 பேருக்கு இதுவரை தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அதில் தீவிர சிகிச்சையில் 43 பேர் உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் நான்கு வார முடக்க கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளபோதும் இந்த போராட்டங்கள் காரணமாக குறித்த கட்டுப்பாடுகள் ஜூலை 30 க்கு பின்னரும் நீடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *