உயிரணு தானத்தால் 15 பிள்ளைகளுக்கு தந்தையான பிரித்தானியர்!

பிரித்தானியாவில் உயிரணு தானத்தால் 15 பிள்ளைகளுக்கு தந்தையான பிரித்தானியர் ஒருவர் தமக்கிருந்த குணப்படுத்த முடியாத மரபணு நோயை மறைத்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

குறித்த நபருக்கு மரபணு நோயானது குணப்படுத்த முடியாது என்பதுடன், அவரால் பிறக்கும் குழந்தைகள் கற்றல் திறன் பாதிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

டெர்பி பகுதியை சேர்ந்த 37 வயது ஜேம்ஸ் மெக்டோகல் என்பவரே தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கிறார். இவரது சமூக ஊடக விளம்பரத்தை நம்பி தன்பாலின ஈர்ப்பு பெண்கள் பலர் உயிரணு தானம் பெற்றுள்ளனர்.

ஆனால், அவருக்கு குணப்படுத்த முடியாத மரபணு நோய் இருப்பதை மொத்தமாக தானம் பெற்ற அனைவரிடத்திலும் மறைத்துள்ளார். மட்டுமின்றி, தமது சில பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட அனுமதிக்க வேண்டும் என கோரி குடும்ப நீதிமன்றத்தை நாடியதுடன், நான்கு பிள்ளைகளின் தாய்மார்களின் ஒப்புதலும் பெற்றுள்ளார்.

ஆனால் மூன்று தாய்மார்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த வழக்கு டெர்பி நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதை அடுத்து, வேறு பெண்களுக்கு உயிரணு தானம் அளிப்பதை தடை செய்துள்ளார் டெர்பி நீதிபதி.

25 வயதான பெண் ஒருவர் ஜேம்ஸ் மெக்டோகல் அளித்திருந்த விளம்பரத்தை நம்பி, இவர் மூலம் 2018ல் பிள்ளை ஒன்றை பெற்றெடுத்தார். ஆனால் குறித்த குழந்தை 3 வயதை எட்டியும் பேச்சு குறைபாடு காணப்பட்டதுடன், அதன் நடவடிக்கையிலும் மாற்றம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண் மெக்டோகலை தொடர்பு கொள்ள, அவர் அடிக்கடி வந்து குழந்தையை சந்தித்து சென்றுள்ளார். இந்த நிலையில், குறித்த பெண் மெக்டோகல் மூலம் மீண்டும் கர்ப்பஅடைந்துள்ளார்.

மட்டுமின்றி, குறித்த பெண்ணை மெக்டோகல் தாக்கி காயப்படுத்தியதாக கூறி அளித்த புகாரின் பேரில் கைதாகியுள்ளார். மேலும், கற்றல் குறைபாடு தமக்கு இருப்பதாகவும் மெக்டோகல் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனிடையே, அடுத்த மூன்றாண்டுகளுக்கு தமது பிள்ளைகள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் என்றே கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *