
கொழும்பு,மே 31
பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தின் நுழைவாயில் அருகில் திங்கட்கிழமை( 30) முற்பகல் அடையாளம் தெரியாதோர் நடாத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பிலான விசாரணைகள், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்தச்சம்பவம் தொடர்பில் இதுவரை ஐவரிடத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் டி சில்வாவின் கீழான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொரு முன்னாள் இராணுவவீரர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
உயிரிழந்தவர் அனுராதபுரம், மகாஇலுப்பல்லம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய லக்ஷித்த விதாரண லியனகே எனும் இராணுவத்தின் முன்னாள் விஷேட படையணி வீரராவார்.
காலி, நாகியாதெனிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இராணுவத்தின் முன்னாள் விஷேட படையணி வீரரே இதன்போது காயமடைந்துள்ளார்.
கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட விஜேராம மாவத்தையில் இரவு நேர களியாட்ட விடுதியொன்றின் முகாமைத்துவத்துடன் முரண்பட்டு அந்த களியாட்ட விடுதியை தாக்கி சேதப்படுத்திய வழக்கில் ஆஜராகிய நிலையில், வீடு திரும்பும் சந்தர்ப்பத்திலேயே நால்வரை இலக்குவைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

